இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், போட்டியின் இடையே இந்திய ரசிகர்களை விராட் கோலி கண்டிக்கும் விடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்திய ரசிகர்கள் பலர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அவமதிக்கும் விதமாக கூச்சலிட்டுள்ளனர்.
அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி குறுக்கிட்டு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் அவருக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்குமாறு அறிவுறுத்தினார். விராட் கோலியின் இந்த செயலை ஐசிசி மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவராலும் பாராட்டுக்குள்ளாகி வருகிறது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித், அதற்கு தண்டனையாக ஒரு வருட தடைக்குப் பின்னர் தற்போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.