
வங்கதேசத்தின் பாதுகாப்பு சூழல்களை கவனித்து வருவதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அரசுப் பணிக்கான இடஒதுக்கீட்டில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் வங்கதேச தலைநகர் டாக்காவில் போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, வங்கதேச காவல் துறை மற்றும் ராணுவம் தலைநகர் டாக்காவில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தின் பாதுகாப்பு சூழல்களை கவனித்து வருவதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக நாடுகளின் பாதுகாப்பு சூழலை கவனிப்பதற்காக எங்களிடம் சுதந்திரமான பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன. வங்கதேசத்தின் சூழல்களை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அந்த அணி டி20 உலகக் கோப்பையை 6 முறை (2010, 2012, 2014, 2018, 2020 மற்றும் 2023) வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தித் தீவுகள் அணி தலா ஒரு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்பைக்கானத் தேடலில் உள்ளது.
இந்திய அணி தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.