பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!
பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார்.
பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-ன் அடுத்த செயலர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பிசிசிஐ தரப்பில் அதன் செயலர் பொறுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. பிசிசிஐ செயலர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 4 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் படி, இன்று (ஜனவரி 4) மாலையுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.
பிசிசிஐ-யின் பொருளாளராக செயல்பட்டுவந்த ஆஷிஷ் ஷீலர், அண்மையில் அவரது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் மகாராஷ்டிர அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பொறுப்பெற்றார். இதனால், பிசிசிஐ செயலர் மற்றும் பொருளாளர் என இரண்டு இடங்களும் காலியாக உள்ளன.
பிசிசிஐ செயலர் பொறுப்புக்காக தேவஜித் சாய்கியாவும், பொருளாளர் பொறுப்புக்காக பிரப்தேஜ் பாட்டியாவும் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் இருவர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் இருவரும் பிசிசிஐ-யின் புதிய செயலர் மற்றும் பொருளாளராக பொறுப்பேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, பிசிசிஐ-யின் இடைக்கால செயலராக தேவஜித் சாய்கியாவை, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.