
அணியை கேப்டனாக வழிநடத்துவது தனக்கு மிகவும் பிடிக்கும் என இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி அந்த அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார். நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.
ஷ்ரேயாஸ் ஐயர் கூறுவதென்ன?
அணியை கேப்டனாக வழிநடத்துவது தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், கேப்டனாக அணியை வழிநடத்துவது தன்னுள் இருக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது எனவும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேப்டனாக அணியை வழிநடத்துவது என்னுடைய பொறுப்புகளை மேலும் அதிகப்படுத்துகிறது. நிறைய முதிர்ச்சியான முடிவுகளை எடுக்க கேப்டன் பொறுப்பு உதவுகிறது. கேப்டனாக இருக்கும்போது, எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஏனெனில், அணி கடினமான சூழலை எதிர்கொள்ளும்போது, வீரர்கள் கேப்டனிடம் வந்து ஆலோசிப்பார்கள். 22 வயதிலிருந்து அணியை வழிநடத்தி வருவதால், அணியை கேப்டனாக திறம்பட வழிநடத்தும் அனுபவம் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். கேப்டனாக நிறைய தருணங்களில் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன். அணியை கேப்டனாக வழிநடத்துவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற அந்த அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 604 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.