
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிதானமாக விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்தியாவைக் காட்டிலும் 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சந்தர்பால் 10 ரன்களிலும், அலிக் அதனாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 35 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜான் கேம்ப்பெல் மற்றும் சாய் ஹோப் இருவரும் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர்.
இந்தியா தரப்பில் முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஜான் கேம்ப்பெல் 87 ரன்களுடனும், சாய் ஹோப் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியைக் காட்டிலும் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.