

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு முதல் டி20 போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்று முதல் டி20 தொடர் தொடங்கியது.
இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன் பின், ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டது. ஷுப்மன் கில் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தும், சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.