
இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவின் செயல்களால் எங்களுக்கு அல்ல, கிரிக்கெட்டுக்குதான் அவமரியாதை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்றிரவு மோதிய இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பின்போது, பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ் கைகுலுக்கியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதையடுத்து, பாகிஸ்தானுடனான லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் டாஸ் சுண்டும்போது, அந்த அணியின் கேப்டனுடன் சூர்ய குமார் யாதவ் கைகுலுக்கவில்லை. விளையாட்டு நிறைவடைந்த பிறகும், இந்திய வீரர்கள் கைக்குலுக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்திருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை.
மேலும், ஆசியக் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி கைகளால் வாங்க மறுத்துவிட்டனர். இதனால், இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை.
இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பேசியதாவது:
”இந்தப் தொடரில் இந்திய அணி செய்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கைகுலுக்காததால் எங்களை அவமதிக்கவில்லை, கிரிக்கெட்டைதான் அவமதித்தார்கள். அவர்கள் செய்ததை ஒரு நல்ல அணி செய்திருக்காது.
தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பு மற்றும் நடுவர்கள் சந்திப்பின்போது சூர்ய குமார் என்னுடன் கைகுலுக்கினார். ஆனால், வெளியுலகத்தில் கேமிரா முன்பு கைகுலுக்க மறுக்கிறார்கள்.
அறிவுறுத்தலை சூர்ய குமார் பின்பற்றுகிறார் என்பது எனக்கு புரிகிறது. தனிப்பட்ட முறையில் சூர்ய குமார் முடிவெடுத்தால் என்னுடன் கைகுலுக்கி இருப்பார்.
இன்று நடந்த அனைத்தும் முன்பு நடந்தவற்றின் விளைவாகும். ஆசியக் கவுன்சில் தலைவர்தான் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கோப்பையை வழங்குவார். அவரிடம் இருந்து பெறவில்லை என்றால், கோப்பையை எப்படி பெறுவீர்கள்?
இதுபோன்று நடப்பதை முதல்முறையாகப் பார்க்கிறேன். இது கிரிக்கெட்டுக்கு கெடுதல் என்பதால், ஒரு கட்டத்தில் நின்றுவிடும் என நம்புகிறேன்.
நான் வெறும் பாகிஸ்தான் கேப்டன் மட்டுமல்ல, ஒரு கிரிக்கெட் ரசிகன். இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதனை பார்க்கிறது என்றால், அவர்களுக்கு நாம் நல்ல செய்தியை அனுப்பவில்லை.” எனத் தெரிவித்தார்.
இறுதியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பலியான பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் அணி வீரர்கள் அனைவரின் ஊதியத்தையும் நன்கொடையாக வழங்குகிறோம் என்று சல்மான் அகா அறிவித்தார்.
இதனிடையே, பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க வேண்டாம் என்று களத்தில் இருந்த வீரர்களே முடிவெடுத்ததாக இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.