

மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி வீராங்கனைகளுக்கு விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4 வது சீசனில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்றிரவு (பிப்.5) சாதனை படைத்தது.
தில்லி கேப்பிட்டல்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோல் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 92 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்து 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து 2-வது முறையாக பட்டம் வெல்ல உதவினர்.
இந்த நிலையில், ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி, மகளிர் பிரீமியர் லீக்கில் பட்டம் வென்ற ஆர்சிபி வீராங்கனைகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், “மீண்டும் சாம்பியன். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபியின் கொடி உயர பறக்கிறது. இது நீங்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் விஷயம்.
இந்த மகத்தான வெற்றிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு, ஆர்சிபி அணியினருக்கும், அணி நிர்வாகத்திற்கும் எனது வாழ்த்துகள். இதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வெற்றித் தருணத்தை அனுபவித்து அன்பான ஆர்சிபி ரசிகர்களின் அன்பைத் தழுவுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.