

டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் இலங்கையின் கொழும்புவில் இன்று (பிப்.7) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, நெதர்லாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மைக்கேல் லெவிட் மற்றும் மேக் ஓ’டவுட் இருவரும் களமிறங்கினர். முதல் பந்தை பௌண்டரியுடன் தொடங்கிய மைக்கேல் லெவிட் சில பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார்.
மேக் ஓ’டவுட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மைக்கேல் 24 ரன்கள் (3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), லீட் 30 ரன்கள் (4 பௌண்டரிகள்), காலின் ஆக்கர்மேன் 20 ரன்கள் (4 பௌண்டரிகள்), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்கள் (3 பௌண்டரிகள் - ஒரு சிக்ஸர்) எடுத்து பெவிலியன் திரும்பினர்.
மற்ற வீரர்கள் ஆர்யன் தத் 13 ரன்களிலும், சாச் லியன் 9 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். பாகிஸ்தான் அணி வீரர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பறந்து பறந்து ஃபீல்டிங் செய்தனர்.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பௌண்டரி கோட்டில் அசத்தலாக கேட்ச் பிடித்து ஷாகீனிடம் கொடுத்து அசத்தினார். அதேபோல், கேப்டன் சல்மான் அலி அகா ஒற்றைக் கையால் கேட்ச் பிடித்து அசத்தினார்.
19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணித் தரப்பில் சல்மான் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், நவாஸ், அப்ரார் அகமது, சைம் அயூப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.