மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!
படம் | AP
Updated on
2 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

ரோமாரியோ ஷெப்பர்டு, ஜேசன் ஹோல்டர் அதிரடி!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பிரண்டன் கிங் 21 ரன்களிலும், கேப்டன் சாய் ஹோப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஷிம்ரன் ஹெட்மேயர் 2 ரன்கள், ரோவ்மன் பௌவல் 9 ரன்கள், ராஸ்டன் சேஸ் 2 ரன்கள், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து, ரோமாரியோ ஷெப்பர்டு மற்றும் ஜேசன் ஹோல்டர் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அதிரடியாக விளையாடிய ரோமாரியோ ஷெப்பர்டு அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஜேசன் ஹோல்டர் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கார்பின் பாஷ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மார்க்ரம், டி காக், ரிக்கல்டான் அதிரடி! அபார வெற்றி!

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 16.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்டது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அய்டன் மார்க்ரம் மற்றும் குயிண்டன் டி காக் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். தென்னாப்பிரிக்க அணி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய டி காக் 24 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், கேப்டன் மார்க்ரமுடன் ரியான் ரிக்கல்டான் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 46 பந்துகளில் 82 ரன்களும் (7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ரியான் ரிக்கல்டான் 28 பந்துகளில் 45 ரன்களும் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் அய்டன் மார்க்ரமுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

South Africa won the Super 8 match against West Indies in Ahmedabad by a huge margin of 9 wickets.

மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!
ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com