எதிரணியின் பந்துவீச்சாளர்கள் அச்சப்படுவதை பார்க்க விரும்புகிறோம்: திலக் வர்மா
எதிரணியின் பந்துவீச்சாளர்கள் அச்சப்படுவதை பார்க்க விரும்புவதாக இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.


எதிரணியின் பந்துவீச்சாளர்கள் அச்சப்படுவதை பார்க்க விரும்புவதாக இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (பிப்ரவரி 26) நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா அரைசதம் விளாசி அசத்தினர். அபிஷேக் சர்மா 55 ரன்கள் (30 பந்துகளில்), ஹார்திக் பாண்டியா 50 ரன்கள் (23 பந்துகளில்), திலக் வர்மா 44 ரன்கள் (16 பந்துகளில்), இஷான் கிஷன் 38 ரன்கள் (24 பந்துகளில்), சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் (13 பந்துகளில்), சஞ்சு சாம்சன் 24 ரன்கள் (15 பந்துகளில்) எடுத்தனர்.
இந்த நிலையில், எதிரணியின் பந்துவீச்சாளர்கள் அச்சப்படுவதை பார்க்க விரும்புவதாக இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஒரு அணியாக அதிக ரன்கள் குவிப்பதை நாங்கள் விரும்புகிறோம். பவர்பிளேவில் 3 அல்லது 4 விக்கெட்டுகளை இழந்தாலும், அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் மாற்றம் கூடாது என ஆலோசித்துள்ளோம். அதனால், விக்கெட்டுகள் போனாலும் அதிரடியாகவே விளையாடுவோம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான தொடக்கத்தைத் தரும்போது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வீரர்களாக களமிறங்கும் வீரர்கள் அதே அதிரடியான ஆட்டத்தைத் தொடர வேண்டும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். எதிரணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச அச்சப்படுவதை பார்க்க விரும்புகிறோம். இந்திய அணியின் பேட்டர்கள் ஒவ்வொரு பந்தினையும் அதிரடியாக அடித்து விளையாட தயாராக இருக்கிறார்கள்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சிறந்த மனநிலையுடன் போட்டியில் விளையாட வேண்டும் என ஆலோசனை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பதைப் பார்த்தோம். அதன் பின், எங்களுக்குள் புத்துணர்ச்சி பிறந்தது. போட்டியின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் கடந்த ஓராண்டாக நாம் எவ்வாறு விளையாடினோம் என்பதை நினைத்துப் பாருங்கள் என கௌதம் கம்பீர் கூறினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...