காயம் ஏற்பட்டது போல நெய்மர் நடிப்பதில்லை என்று அவரைப் பற்றிய விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் வீரர் ரொனால்டோ.
மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேஸில் அணிக்காக விளையாடிய பிரபல வீரர் ரொனால்டோ நெய்மர் குறித்த விமரிசனங்களுக்குத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
எதிரணி வீரர்கள் லேசாக இடித்தாலே வலியால் துடிப்பது போல நடிக்கிறார் என்று பிரேஸில் அணியின் வீரர் நெய்மர் மீது விமரிசனங்கள் எழுந்துள்ளன. நம் ஊரிலும் நெய்மர் குறித்த இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீம்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நெய்மரின் இந்தச் செயலால் நேரம் வீணாவதாகவும் எதிரணிகளின் பயிற்சியாளர்கள் விமரிசனம் செய்துள்ளார்கள்.
இந்நிலையில் நெய்மருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ரொனால்டோ. இதுபற்றி அவர் கூறியதாவது:
கால்பந்து விளையாட்டைப் பலவிதங்களில் அணுகமுடியும். மாற்றிக் கருத்து சொல்லவும்முடியும்.
நெய்மர் நடிக்கிறார் என்கிற விமரிசனங்களை நான் மறுக்கிறேன். தன்னுடைய நகர்வுகளில் அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். எதிரணி வீரர்களை எப்படி எதிர்கொள்வது, அவர்களிடமிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்று அவருக்குத் தெரியும். (எதிரணி வீரர்களின் தாக்குதலில் இருந்து) நெய்மரை எந்தளவுக்கு நடுவர்கள் பாதுகாக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பலரும் தொடர்ந்து தாக்கும்போது அதை நியாயமற்றதாகவே நான் கருதுவேன். (நெய்மர் மீதான ) விமரிசனங்கள் அபத்தமானவை. தொலைக்காட்சிகளும் அச்சு ஊடகங்களும் இடத்தை நிரப்பவே இதுபோல விமரிசனம் செய்கின்றன என்று நெய்மருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.