
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியின் கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆகஸ்ட் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
அக்டோபர் 17 முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை மோதவுள்ளது. அக்டோபர் 18-ல் நமிபியாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை இலங்கை விளையாடுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களான துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இருவரும் கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியதை ஆர்சிபி அணி உறுதி செய்துள்ளது. இதனால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் இருவரும் இடம்பெற மாட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.