ராஜஸ்தான் த்ரில் வெற்றி: கடைசி ஓவரில் கலக்கிய கார்த்திக்

ஐபிஎல் போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது. 
ராஜஸ்தான் த்ரில் வெற்றி: கடைசி ஓவரில் கலக்கிய கார்த்திக்

ஐபிஎல் போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது.
 முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது.
 இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் இன்னிங்ஸில் மஹிபால் லோம்ரோர் விளாசலில் அந்த அணி சற்று முன்னேற்றம் கண்டது. பஞ்சாப் பெüலரில் அர்ஷ்தீப் சிங் அசத்தினார். பின்னர் பஞ்சாப் இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் அதிரடி காட்ட, ராஜஸ்தான் பெüலிங்கில் கார்த்திக் தியாகி கடைசி ஓவரை அருமையாக வீசி வெற்றிக்கு வழி வகுத்தார்.
 முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸை தொடங்கிய எவின் லீவிஸ் -யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி நன்றாக ஸ்கோர் செய்தது. இதில் முதல் விக்கெட்டாக எவின் லீவிஸ் 36 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டார்.
 அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் நடையைக் கட்ட, தொடர்ந்து களம் கண்ட லியாம் லிவிங்ஸ்டன் 25 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் நிதானமாக ரன்கள் சேர்த்து வந்த யஷஸ்வி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
 லிவிங்ஸ்டனை அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் அதிரடி காட்டினார். மறுபுறம் ரியான் பராக் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மஹிபால் 17 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முடித்துக் கொண்டார்.
 எஞ்சியோரில் ராகுல் தெவாதியா 2, கிறிஸ் மோரிஸ் 5, சேத்தன் சகாரியா 7, கார்த்திக் தியாகி 1 ரன்களுக்கு வெளியேற, முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் ஆட்டம். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5, முகமது ஷமி 3, இஷான் பொரேல், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
 பின்னர் 186 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பஞ்சாபில் கேப்டன் கே.எல்.ராகுல் -மயங்க் அகர்வால் அருமையான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கே 120 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியில் முதலில் ராகுல் 49 ரன்களுக்கு வீழ்ந்தார்.
 தொடர்ந்து மயங்க் அகர்வால் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 67 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
 பின்னர் வந்த எய்டன் மார்க்ரம் நிதானமாக ஆட, நிகோலஸ் பூரன் அதிரடி காட்டினார். பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசிய இந்த கூட்டணி அணியை வெற்றிக்கு வழிநடத்தும் என எதிர்பார்த்த நிலையில் கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 32 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து வந்த தீபக் ஹூடா டக் அவுட்டாக, கடைசி நேரத்தில் பந்துகளும், விக்கெட்டுகளும் வீணானதால் பஞ்சாபின் வெற்றி பறிபோனது. ஓவர்கள் முடிவில் மார்க்ரம் 26, ஃபாபியான் ஆலன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் கார்த்திக் தியாகி 2, சேத்தன் சகாரியா, ராகுல் தெவாதியா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
 இன்றைய ஆட்டம்
 டெல்லி கேப்பிடல்ஸ் -
 சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
 நேரம்
 இரவு 7.30
 இடம்
 துபை
 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com