ஹோல்டர் சிக்ஸர்கள் வீண்: 5 ரன்களில் பஞ்சாப் வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | பஞ்சாப் திணறல் பேட்டிங்: ஹைதராபாத்துக்கு 126 ரன்கள் இலக்கு
126 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ரித்திமான் சஹா களமிறங்கினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தனது அடுத்த ஓவரில் வில்லியம்சன் (1) விக்கெட்டையும் வீழ்த்தி ஷமி அசத்தினார். இதனால், பவர் பிளேவில் அந்த அணியால் பெரிதளவில் ரன் குவிக்க முடியவில்லை. 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்பிறகு, 8-வது ஓவரில் ரவி பிஷ்னாயை அறிமுகப்படுத்தினார் கேப்டன் ராகுல். அதற்குப் பலனாக மணீஷ் பாண்டே (23 பந்துகள் 13 ரன்கள்) விக்கெட் கிடைத்தது.
தொடர்ந்து, ரன் ரேட் உயராததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 8-ஐத் தாண்டியது. இந்த நிலையில், ரவி பிஷ்னாய் 13-வது ஓவரில் இரட்டை அடி கொடுத்தார். கேதார் ஜாதவ் (12), அப்துல் சமத் (1) ஆட்டமிழந்தனர்.
கடைசி 6 ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில் 2 ஓவர்களில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு நம்பிக்கையளித்தார் ஹோல்டர்.
ஆனால், அதற்குள் தொடக்க வீரர் சாஹா 31 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஷமி ஓவரிலும் ஹோல்டர் சிக்ஸரைப் பறக்கவிட்டதால் கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்டன.
19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசி முதல் பந்தில் ரஷித் கானை வீழ்த்தி அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால், கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. எலிஸ் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஹோல்டர் சிக்ஸரைப் பறக்கவிட்டாலும், அதன்பிறகு, சிறப்பாகப் பந்துவீசினார் எலிஸ். கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.