சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐபிஎல் ஆட்டத்தை விளையாட விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ளார் தோனி. கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா தொடர்பாக இணையம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் தோனி. அப்போது அவர் கூறியதாவது:
என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சிஎஸ்கேவுக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம். எனக்குப் பிரியாவிடை அளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு நாங்கள் வருவோம். அங்கு என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். ரசிகர்களை நாங்கள் அங்கு காணலாம். ஆகஸ்ட் 15 சிறந்த நாள் என்பதால் தான் அந்த நாளில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன் என்றார்.
ஐபிஎல் 2021 போட்டியுடன் தோனி ஓய்வு பெற்று விடுவாரா என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்த நிலையில் தோனியின் இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.