டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இலங்கை அணியினருடன் ஜெயவர்தனே இணைந்துகொள்வார். மேலும் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள யு-19 உலகக் கோப்பைப் போட்டிக்கான இலங்கை அணியின் ஆலோசகராகவும் ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.