கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது இயான் மார்கன், ரவிச்சந்திரன் அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா: புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடம்
இதில் டெல்லி பேட்டிங்கில் டிம் சௌதி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் ஆட்டமிழந்தார். அப்போது சௌதி, அஸ்வின் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மார்கன் ஏதோ கூற அஸ்வின் ஆக்ரோஷமாக அவரை நோக்கிச் சென்றார். இருவரும் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர்.
உடனே, கொல்கத்தா விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அஸ்வினையும், டெல்லி கேப்டன் ரிஷப் பந்தையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதன்பிறகு, கொல்கத்தா பேட்டிங்கின்போது இயான் மார்கனை டக் அவுட் செய்தார் அஸ்வின். மார்கன் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அஸ்வினின் கொண்டாட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.