அடுத்த ஆட்டத்திலேயே தவறை சரி செய்த பாண்டிங்: கெத்து காட்டிய பிரித்வி!

லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் டெல்லி கேபிடல்ஸ் பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது.
அடுத்த ஆட்டத்திலேயே தவறை சரி செய்த பாண்டிங்: கெத்து காட்டிய பிரித்வி!
Published on
Updated on
1 min read


லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் டெல்லி கேபிடல்ஸ் பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னருக்கு நடப்பு ஐபிஎல் சீசனில் இது முதல் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் வார்னர் நிதானம் காட்ட, பிரித்வி வழக்கம்போல் காட்டாறுபோல் கட்டுக்கடங்காமல் அதிரடி காட்டினார். இதனால், பவர் பிளே முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது. பிரித்வி 27 பந்துகளில் 47 ரன்களும், வார்னர் 9 பந்துகளில் 3 ரன்களும் எடுத்தனர்.

பவர் பிளேவில் இப்படி ஒரு ஆட்டத்தைதான் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எதிர்பார்த்தார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியடைந்தது.

பாண்டிங் சொன்னது:

இந்தத் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாண்டிங், "துரதிருஷ்டவசமாக தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளோம். ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது. ஆனால், பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்தால், வெற்றி பெறுவது கடினம். அந்த ஒரு இடத்தில் நாங்கள் சற்று முன்னேற்றம் காண வேண்டும்" என்றார்.

பாண்டிங் சுட்டிக்காட்டிய தவறை அந்த அணி அடுத்த ஆட்டத்திலேயே சரி செய்திருக்கிறது. அதன் விளைவுதான் லக்னௌவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருப்பது. இதில் பெரும் பங்கு பிரித்வி ஷாவையே சேரும்.

டெல்லியின் பவர் பிளே வரலாறு:

மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பவர் பிளேவில் டிம் செய்ஃபெர்ட், மன்தீப் சிங், கேப்டன் ரிஷப் பந்த் என 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் டிம் செய்ஃபெர்ட், பிரித்வி ஷா, மன்தீப் சிங் ஆகியோரை பவர் பிளேவில் இழந்து 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com