ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணியின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது - 4-வது வெளிநாட்டு வீரர் யார்?
பிராவோவைத் தவிர ஆரம்பத்தில் வேறு எந்த வெளிநாட்டு வீரரும் சிஎஸ்கேவுக்குப் பெரிதாக உதவவில்லை. ஆனால் நாளடைவில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவும் பிரிடோரியஸும் நன்றாக விளையாடி தங்களுடைய இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். நடுவில் ஜோர்டனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து ஏமாந்தது சிஎஸ்கே.
பிராவோ, மஹீஷ் தீக்ஷனா, பிரிடோரியஸ்.
மூன்று பேர் உறுதி. 4-வது வெளிநாட்டு வீரர் யார்?
மொயீன் அலியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்தது சிஎஸ்கே. ஆனால் 5 ஆட்டங்களில் விளையாடி அதிகபட்சமாக 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மொயீன் அலி. 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் சிஎஸ்கே அணி நெருக்கடிக்கு ஆளாகியது. சுழற்பந்துவீச்சில் இதுவரை ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.
இதனால் தான் மும்பைக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் மிட்செல் சான்ட்னரைத் தேர்வு செய்தது சிஎஸ்கே. இனி வரும் ஆட்டங்களிலும் சான்ட்னரையே சிஎஸ்கே தேர்வு செய்யுமா அல்லது மொயீன் அலிக்கு மேலும் வாய்ப்புகள் வழங்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
இனி வரும் வாரங்களில் மும்பை, புணே ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறும் என்பதால் சான்ட்னரைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. எனினும் மொயீன் அலி போன்ற ஒரு திறமைசாலியை அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியுமா? தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் அவரால் ரன்கள் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கையும் ரசிகர்களிடம் உள்ளது. உண்மையில் சிஎஸ்கேவுக்கு இது சிக்கலான நிலைமைதான். பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் சான்ட்னர் மீண்டும் தேர்வானால் மொயீன் அலி மேலும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலவரமாக இருக்கும்.