ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் ஆட்டங்கள் கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிரத்திலுள்ள 4 மைதானங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் கரோனா பாதிப்புகள் ஏற்பட்டு இடையில் சிக்கல் உண்டாகியது.
பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் பிசிசிஐயின் முதற்கட்ட அறிவிப்பில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஐபிஎல்: தமிழக வீரர்கள் எப்படி விளையாடி வருகிறார்கள்?
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:
"ஐபிஎல் 2022-இன் பிளே ஆஃப் சுற்று ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும். இறுதி ஆட்டம் நரேந்திர மோடி மைதானத்தில் மே 29-ம் தேதி நடைபெறுகிறது. அதே மைதானத்தில் மே 27-ம் தேதி குவாலிஃபையர் 2 ஆட்டம் நடைபெறும். குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முறைய மே 24 மற்றும் 25-ம் ஆகிய தேதிகள் நடைபெறவுள்ளன.
மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் இந்த ஆண்டு தொடங்கும். இந்த ஆட்டங்கள் மே 23, மே 24, மே 26 மற்றும் இறுதி ஆட்டம் மே 28-இல் புணேவில் நடைபெறும்" என்றார் அவர்.