ஐபிஎல் 2022 போட்டியை யார் வெல்வார் என்பதற்கான போட்டியில் 8 அணிகள் உள்ளன.
கடைசி இடத்தை யார் தவிர்க்கப் போகிறார் என்பதற்கான போட்டியில் சிஎஸ்கேவும் மும்பையும் உள்ளன.
10 அணிகளும் தலா 13 ஆட்டங்களில் விளையாடி விட்ட நிலையில் சிஎஸ்கே 8 புள்ளிகளுடன் 9-ம் இடத்திலும் மும்பை 6 புள்ளிகளுடன் 10-ம் இடத்திலும் உள்ளன. சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் - -0.206, மும்பையின் நெட் ரன்ரேட் - -0.577.
வெள்ளியன்று ராஜஸ்தானை சிஎஸ்கேவும் சனிக்கிழமையன்று தில்லியை மும்பையும் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் எதிர்கொள்கின்றன.
ஐபிஎல் போட்டி லீக் சுற்றின் முடிவில் மும்பையும் சிஎஸ்கேவும் இதுவரை கடைசி இடத்தைப் பிடித்ததே இல்லை. ஆனால் இம்முறை இரு அணிகளில் ஒன்று எப்படியும் அந்த நிலையை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
இந்த ஆண்டு தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணியால் கடைசி இடத்தைத் தவிர்க்க முடியுமா?
வாய்ப்புள்ளது.
* சிஎஸ்கேவுடனான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 50 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெல்லவேண்டும். அல்லது ராஜஸ்தான் அணி இலக்கை 14-15 ஓவர்களில் விரட்ட வேண்டும்.
* மும்பைக்கு அப்படியே தலைகீழ். 50 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தில்லியை வெல்லவேண்டும். அல்லது மும்பை அணி இலக்கை 14-15 ஓவர்களில் விரட்ட வேண்டும்.
இந்த இரண்டில் எது நடக்காமல் போனாலும் மும்பை அணிக்குக் கடைசி இடம் தான்.