ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இதற்கு முக்கிய காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் அவர்கள் அடுக்க நினைத்தது 19 வயது சஷாங்க் சிங். ஆனாலும் பஞ்சாப் அவருக்கு வாய்ப்பளித்தது.
நேற்றைய போட்டியில் இக்கட்டான சூழலில் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து பஞ்சாப் வெற்றி வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.
நடிகை பிரீத்தி ஜிந்தா 1998இல் மணிரத்னம் இயக்கிய தில் சே படத்தில் அறிமுகமாகி 2018ஆம் ஆண்டுடன் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார். தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார். உடன் ஐபிஎல்-இல் பஞ்சாப் அணியையும் வாங்கியுள்ளார்.
ஆட்டநாயகன் குறித்து நடிகையும் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த ஏலத்தில் எங்களைக் குறித்து பேசிய பலருக்கும் பதிலளிக்க சரியான நேரமாக இதைப் பார்க்கிறேன். அழுத்தத்தினாலும், நம்பிக்கையின்மையினாலும் பல்வேறு மக்கள் இது போன்ற சூழ்நிலைகளில் இருந்திருப்பீர்கள். ஆனால் சஷாங்க் அப்படி ஆகவில்லை. அவர் மற்றவர்களைப் போல் அல்ல. அவர் நிஜமாகவே சிறப்பானவர். அவரது திறமையை வைத்து மட்டுமே இதை சொல்லவில்லை; அவரது நேர்மறையான சுபாவத்தை நம்பமுடியாத தன்னம்பிக்கை வைத்தே சொல்லுகிறேன்.
அவருக்கு வந்த நகைச்சுவை, கேலி, கிண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் எதையும் குற்றம் சுமத்தவில்லை. அவர் தன்னைத்தானே நம்பி அவர் யாரென எங்களுக்கு காட்டிவிட்டார். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். எனது பாராட்டையும் மரியாதையும் சஷாங்க் பெற்றுவிட்டார் .
வாழ்க்கை நாம் நினைத்ததுபோல் நடக்கவில்லை எனில் எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமென இவரைப் பார்த்து அனைவரும் கற்றுக்கொள்வார்களென நம்புகிறேன். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியம்! அதனால் எப்போதும் சஷாங்க்கினைப் போல் நீங்களும் உங்களை நம்புவதை கைவிடாதீர்கள். அப்படியிருந்தால் நீங்கள்தான் வாழ்க்கையின் ஆட்டநாயகன்.