வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதியாக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் விளையாடிய முகேஷ் சௌத்ரி ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக முகேஷ் சௌத்ரியின் ஓவர் மாறியது.
இந்த நிலையில், வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதியாக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: முகேஷ் சௌத்ரியை அணியில் சேர்க்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. அவர் கடந்த காலங்களில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த நாள் அவருடைய நாளாக அமையவில்லை. ஆனால், இவையனைத்துமே ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியே. அணிக்காக புதிய ஹீரோக்களை தேடும் முயற்சியில் இதுபோல் நடைபெறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், சிஎஸ்கே வீரர்களின் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. வீரர்கள் அனைவரும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.