போட்டிகளை ஜெயிக்க வேண்டும் என என் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதை நான் அழுத்தமான சூழலாக எடுத்துக் கொள்ளவில்லை என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வீரர் யஷ் தாக்குர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் லக்னௌவின் யஷ் தாக்குர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், போட்டிகளை ஜெயிக்க வேண்டும் என என் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதை நான் அழுத்தமான சூழலாக எடுத்துக் கொள்ளவில்லை என யஷ் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மயங்க் யாதவ் மிகச் சிறந்த வீரர். அவரது பந்துவீச்சு வேகம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. என்னுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும். எனது பலத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். மயங்க் யாதவ் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பிறகு, இன்று உன்னுடைய நாளாக இருக்கலாம் என கே.எல்.ராகுல் என்னிடம் கூறினார். உன்னால் அணிக்காக போட்டியை வென்று தர முடியும் என்றார்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் உன் மீது நம்பிக்கை வைத்து பந்துவீசு. வெளியிலிந்து ஏற்படும் அழுத்தங்கள் குறித்து கவலைப்படாதே என்றார். என் மீது எதிர்பார்ப்புகள் உருவாகும்போது நான் அழுத்தமான சூழலுக்கு தள்ளப்படுவதில்லை. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து ஆட்டத்தை வென்று கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
நேற்றையப் போட்டியில் 3.5 ஓவர்கள் வீசிய யஷ் தாக்குர் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.