விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானின் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் விராட் கோலி சதமடித்த போதிலும், பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இதுவரை நாங்கள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். இதுபோன்ற சூழலில் இருப்பதை எந்த ஒரு அணியும் விரும்பாது. எங்களது பேட்டிங்கில் சில பிரச்னைகள் உள்ளன. விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். மற்ற வீரர்கள் ரன்கள் குவிக்கத் தடுமாறி வருகிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.
நேற்றையப் போட்டியில் விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.