ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் எதிர்காலம் குறித்து இந்திய அணி நிர்வாகம் தெளிவாக இருக்கிறதா என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. லார்ட்ஸில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத ரோஹித் சர்மா, கடைசிப் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். முதல் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத விராட் கோலி, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

யுவராஜ் சிங்
இந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் எதிர்காலம் குறித்து இந்திய அணி நிர்வாகம் தெளிவாக இருக்கிறதா என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜியோஸ்டாரில் பேசியதாவது: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதைக் காட்டிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் குறித்து நான் அதிகம் கவலைப்படுகிறேன். அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் அதற்கான பயிற்சியில் இருக்கிறாரா என்பது கவலையளிக்கிறது.
உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான திட்டத்தில் அவர் இருக்கும்பட்சத்தில், போட்டிகளில் அவர் விளையாடுவது மிகவும் முக்கியம். அப்போதுதான் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும். அவர் இந்திய அணிக்காக அண்மையில் அதிகம் ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் அவருக்கான அழுத்தம் திடீரென அதிகரிக்கப் போகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான திட்டமிடலில் தெளிவாக இருக்க வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வைக்க நினைத்தால், அதனை அணி நிர்வாகம் அவர்களிம் தெளிவாக தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறோம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கும்பட்சத்தில், அவர் போதுமான அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடவைக்கப்பட வேண்டும். யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? ஏற்கனெவே இதுபோன்ற சூழலை நாம் சந்தித்துள்ளோம். அதனால் கடந்த காலத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும்போது, ரோஹித் சர்மா 40 வயதினைக் கடந்திருப்பார், விராட் கோலிக்கு 39 வயதாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Yuvraj Singh has spoken about whether the Indian team management is clear regarding the futures of both Rohit Sharma and Virat Kohli.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











