ஓய்வு பெறுவது தொடர்பாக ரோஹித் சர்மா எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. லார்ட்ஸில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
லார்ட்ஸ் போட்டியுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல் பரவியது. இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவிக்க, அது பொய்யான தகவல் என்பது உறுதியானது.

ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ரோஹித் சர்மா எங்களிடம் எதுவும் கூறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: ரோஹித் சர்மாவுடன் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து எங்களிடம் அவர் எதுவும் கூறவில்லை. இவை அனைத்தும் ஊடகங்களில் மட்டுமே வரும் செய்தி என நினைக்கிறேன். அவர் ஓய்வு பெறுவது தொடர்பாக இந்திய அணியில் எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை என்றார்.
39 வயதாகும் ரோஹித் சர்மா லார்ட்ஸ்லில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி வரலாறு படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 110 பந்துகளில் 138 ரன்கள் (17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் லார்ட்ஸ் திடலில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team captain Shubman Gill has stated that Rohit Sharma has not informed them anything regarding retirement.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










