மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், லசித் மலிங்காவைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பும்ராவைப் போன்று தனியொருவராக போட்டியை வென்று கொடுக்க முடியாது எனவும், நடப்பு ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார் பும்ரா எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் நாளில் பும்ராவின் பந்துவீச்சிலிருந்து பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் அவரது பந்துவீச்சில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர் ஆட்டத்திலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள விரும்புகிறார். இன்றையப் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளபோதிலும், அவர் அடுத்தப் போட்டியில் பந்துவீச்சில் என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து யோசிப்பார். அவர் அழுத்தமான சூழலில் அமைதியாக இருக்கிறார். அழுத்தமான சூழலில் அவரைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுபவர்கள் இருக்க முடியாது என நினைக்கிறேன்.
விராட் கோலி, எம்.எஸ்.தோனி குறித்து மக்கள் அதிகம் பேசுவார்கள். ஏனெனில், அவர்கள் பேட்ஸ்மேன்கள். ஆனால், சூப்பர் ஸ்டார்கள் என எடுத்துக் கொண்டால், ஜஸ்பிரித் பும்ராவே நடப்பு ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் போட்டிகளை வென்று கொடுப்பவர். பும்ரா அளவுக்கு இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சிறப்பாக செயல்படக் கூடியவர் என்றார்.