ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் சரியான முடிவை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிளன் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கிளன் மேக்ஸ்வெல் சரியான முடிவை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல்லைப் போன்ற மிகப் பெரிய வீரர்களின் மீது அதிக அளவில் அழுத்தம் இருக்கும். அவர்கள் சரியாக விளையாடவில்லையென்றால், அவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. இதுவரை நடந்த போட்டிகளில் தனிநபர் மீது அழுத்தம் ஏற்படுவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்துவம் இருக்கிறது. அவர்கள் மனதளவில் புத்துணர்ச்சியாக இருப்பது மிகவும் அவசியம். உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சிப் பெறுவதற்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துள்ள மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானதே என்றார்.