சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா 4-வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடுவதாக சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா 4-வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடுவதாக சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில போட்டிகளாக ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்காக 4-வது வீரராக களமிறங்கி தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்திலேயே பேட்டிங் செய்து வந்தார். தற்போது 4-வது வீரராக களமிறங்கி ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவர் சரியான பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து சரியான ஷாட்டுகளை விளையாடுகிறார். ரன்கள் ஓடும்போது மிகவும் வேகமாக செயல்படுகிறார். 4-வது இடத்தில் அவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறேன் என்றார்.