முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். அத்துடன் மும்பை அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஹார்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையப் போட்டியில் லக்னௌ அணியிடம் மும்பை அணி தோல்வியுற்றது.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
இந்தக் குறிப்பிட்ட ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ஆனால் அவற்றை எல்லாம் நன்றாகவே சமாளித்து வருகிறார். அவர் இந்தியாவுக்காக வெளிநாட்டில் சென்று விளையாடும்போது வேறுமாதிரியான மனநிலையில் விளையாடுவார். பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் சிறப்பாக பங்களிப்பார்.
பலரும் ஐபிஎல் விளையாடுவதால் நல்ல ரிதமில் உலகக் கோப்பைக்கு செல்வார்கள். பந்து வீச்சாளர்கள் பந்து வீசுகிறார்கள். பேட்டர்கள் 80,90, 100 என நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஒரு வார இடைவெளி எடுத்துகொண்டு உலகக் கோப்பைக்கு செல்கிறார்கள். இந்த இடைவேளை அவர்களுக்கு புத்துணர்வாக இருக்கும். அதே சமயம் துருப்பிடிக்காமலும் (விளையாடாமலும்) இருக்கிறார்கள் என்றார்.