தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி வீழ்த்தியது.
முதலில் விளையாடிய தில்லி அணி 221 ரன்கள் குவித்த நிலையில், இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சான் 16-வது ஓவரில் 46 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அவுட்டானார்.
முகேஷ் குமார் வீசிய 16-வது ஓவர் 4-வது பந்தை சஞ்சு சாம்சன் தூக்கி அடித்த நிலையில், பவுண்டரி கோட்டுக்கு மிக அருகாமையில் ஷாய் ஹோப் பிடித்தார். அது சிக்ஸா?, கேட்சா? என்று கள நடுவர்களால் முடிவெடுக்க முடியாததால் மூன்றாவது நடுவரை நாட, அவர் அவுட் கொடுத்தார்.
பலவிதமான ஸ்மார்ட் சிஸ்டம் கொண்ட ஐபிஎல் போட்டியில் அவசர கதியில் விக்கெட் கொடுத்தது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரும் இலங்கை முன்னாள் வீரருமான குமார் சங்ககாரா கூறியதாவது:
இது கோணம், ரீப்ளேவை பொறுத்தது. அவரது கால் எல்லைக் கோட்டினை தொட்டது போல் தெரிந்தது. 3ஆவது நடுவருக்கு இது சற்று கடினமான ஒன்று. போட்டியின் முக்கியமான நேரத்தில் இப்படி நடப்பது எல்லோருக்கும் வித்தியாசமான பார்வைகளைத் தரும். கடைசியில் நாம் 3ஆவது நடுவரின் தீர்பை ஏற்க வேண்டும்.
எங்களுக்கு வேறு கருத்துகள் இருந்தால் நடுவர்களிடம் முறையிட்டு தீர்த்துகொள்வோம். அந்த விக்கெட்டினை பொருட்படுத்தாமலும் நாங்கள் போட்டியில் வென்றிருக்க வேண்டும். தில்லி அணியினர் இறுதியில் நன்றாக பந்து வீசினார்கள் என்றார்.
இந்த சம்பவத்தினால் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.