ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி.
சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள், அபிஷேக் சர்மா 75* (28) ரன்கள் குவித்தனர்.
டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தின டிராவிஸ் ஹெட்டை பிரபல இணையத்தொடர் நாயகனுடன் ஒப்பிட்டு ஹெட் மாஸ்டர் என ஹைதராபாத் புகழ்ந்துள்ளது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் பேசியதாவது:
10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது நன்றாக இருந்தது. அபியும் நானும் இதுபோல சில பார்ட்னர்ஷிப்புகள் கொண்டுள்ளோம். நல்ல நிலையில் நின்றுகொண்டு பந்தினை பார்த்து அடிப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. முடிந்த அளவுக்கு பவர் ஃபிளேவை உபயோகிக்க வேண்டும். ஸ்பின்னர்களை அடிப்பதற்காக தனியாக பயிற்சி எடுத்து வருகிறேன். மே.இ.தீவுகளிலும் இது எனக்கு உதவும் என நம்புகிறேன்.
இந்த புதுமையான காலத்தில் 360 கோணத்திலும் அடிப்பது முக்கியம். கடைசி 12 மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவுக்காக எப்படி ஆட சொன்னார்களோ அதையேதான் இங்கும் ஆடுகிறேன். பெரிதாக எதையும் மாற்றவில்லை. ஸ்பின்னர்களை அபிஷேக் மாதிரி யாரும் ஆடுவதில்லை.
டைம் அவுட் வரும்வரை நெட் ரன் ரேட் குறித்து கவலைப்படவில்லை. பிறகு, வீரர்கள்தான் சொன்னார்கள். பின்னர் வேகமாக முடித்தோம். கடைசி 2 போட்டிகளில் தோற்றதற்கு இந்த இரவு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஹைதராபாத் அணி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.