ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கப்படுவதற்கு இம்பாக்ட் பிளேயர் விதி காரணமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 41 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 முறை 250 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியால் அதிகபட்ச ரன்கள் (287 ரன்கள்) குவிக்கப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்படுவது இம்பாக்ட் பிளேயர் விதியால் மட்டுமல்ல எனவும், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதால் அதிக ரன்கள் குவிக்கப்படுகிறது எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாவிட்டாலும், அதிக ரன்கள் குவிக்கப்படும். என்னைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறுவேன். அதேபோல ஆடுகளங்கள் தரமாக உள்ளன. எதிர்காலத்தில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டியிருக்கும். எவ்வளவு நன்றாக பந்துவீசினாலும், பந்துவீச்சாளர்கள் நன்றாக பேட்டிங் செய்யவும் வேண்டும். போட்டிகள் அவ்வாறுதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றன என்றார்.
நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.