டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு நுழைந்து வரலாறு படைத்துள்ளது.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணியின் தடுப்பாட்டம் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒரு கோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.
ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி இன்று அரையிறுதியில் விளையாடவுள்ளது.
இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஸூர்ட் மரைனே, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ட்விட்டரில் ஒரு தகவல் தெரிவித்தார். இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால், தான் வீட்டுக்குப் பின்னர் வருவதாகக் கூறினார்.
சக் தே இந்தியா படத்தில் மகளிர் ஹாக்கி பயிற்சியாளராக நடித்தார் ஷாருக் கான். கபிர் கான் வேடத்தில் அவர் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் சாதனை வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்து, ஸூர்ட் மரைனேவின் ட்வீட்டுக்கு ஷாருக் கான் பதில் அளித்ததாவது:
நீங்கள் (ஸூர்ட் மரைனே) திரும்பி வரும்போது கோடிக்கணக்கான குடும்ப உறுப்பினர்களுக்காகத் தங்கம் கொண்டு வாருங்கள். இந்தமுறையும் தந்தேராஸ் தினம் நவம்பர் 2 அன்று வருகிறது. - முன்னாள் பயிற்சியாளர் கபிர் கான் என்றார்.
இதற்கு ஸூர்ட் மரைனே கூறியதாவது: அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எங்களுடைய முழுத்திறமையையும் மீண்டும் வெளிப்படுத்துவோம். இப்படிக்கு - நிஜ பயிற்சியாளர் என்றார்.