'தங்கம்' நீரஜ் சோப்ரா: பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர் வாழ்த்து
By DIN | Published On : 07th August 2021 06:56 PM | Last Updated : 07th August 2021 07:37 PM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா
பிரதமர் மோடி:
"டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா சாதித்துள்ளது என்றும் நினைவிலிருக்கும். இளம் நீரஜ் மன உறுதியுடன் சிறப்பாக விளையாடினார். தங்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள்."
குடியரசுத் தலைவர்:
"இதுவரை இல்லாத வகையில் நீரஜ் சோப்ரா வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் வென்ற தங்கம் பல தடைகளை உடைத்து வரலாறு படைத்துள்ளது. உங்களது முதல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தடகளத்துக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளீர்கள். உங்களுடைய சாதனை இளைஞர்களை ஊக்கப்படுத்தும். மனதார வாழ்த்துகள்!"
இதையும் படிக்க | 7 பதக்கங்கள்: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சாதனை
முதல்வர் மு.க. ஸ்டாலின்:
"இந்திய விளையாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் 120 ஆண்டு காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த நீரஜ் சோப்ராவுக்கு மனதார பாராட்டுகள். கோடிக்கணக்கான இதயங்களில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள். நீங்கள் நாட்டின் உண்மையான ஹீரோ."