சிட்னி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்ய முயன்றேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இவர் 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்ற போது முக்கிய பங்கு வகித்தார். 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் . தற்போது இவர் தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து சுயசரிதை நூலை இன்று வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனது திருமண பந்தமும் முறிந்து போனது. இதனால் தொடர்ந்து மது குடிக்கத் தொடங்கினேன். செய்த வேலையிலும் மனநிறைவு கிடைக்கவில்லை. இதனால், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.
ஒருநாள் போர்ட் பீச் பகுதியில் என் காரை நிறுத்தி விட்டு இருட்டில் கடலை நோக்கி நடந்து சென்றேன்.கடலுக்குள் குறிப்பிட்ட இடம் வரை நீந்திச் செல்ல வேண்டும். திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தேன். நான்கு முறை நீந்திச் சென்றேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்து விட்டேன்.
இவ்வாறு ஹாக் சுயசரிதையில் கூறியுள்ளார்.