பல்லகெலே டெஸ்ட்: இந்தியா 487 ரன்களுக்கு ஆல்-அவுட்

பல்லகெலே டெஸ்ட்: இந்தியா 487 ரன்களுக்கு ஆல்-அவுட்

பல்லகெலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தவன், பாண்டியா சதம் விளாசினர்.
Published on

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து கொழும்புவில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன், அதிரடியாக ஆடி சதமடித்தார். 123 பந்துகளில் 17 பவுண்டரிகளின் உதவியுடன் 119 ரன்கள் குவித்தார். லோகேஷ் ராகுல் 85 ரன்களுக்கு அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இளம் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 86 பந்துகளில் சதம் விளாசினார். 96 பந்துகளில் 7 இமாலய சிக்ஸர்களுடன் 8 பவுண்டரிகளை விரட்டி 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

சர்வதேச அரங்கில் ஹார்திக் பாண்டியா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் 8-ஆவது வரிசையில் களமிறங்கிய வீரர் அடித்த அதிவேக சதமாகவும் இது பதிவானது.

கேப்டன் விராட் கோலி 42, அஸ்வின் 31 ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இலங்கை தரப்பில் லஷன் ஸன்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மலின்டா 3, ஃபெர்னான்டோ 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com