டெஸ்ட்: 298 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!

298 ரன்கள் முன்னிலையுடன் இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் முனைப்பில்...
டெஸ்ட்: 298 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. இதனால் ஆஸி. அணி 2-ம் நாளின் முடிவில் 298 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் இந்திய அணி 5 பெளலர்களுடன் களமிறங்கியது. 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் இடம்பெற்றார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57, ஹேஸில்வுட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் விக்கெட்டை 61 ரன்களில் வீழ்த்தினார் அஸ்வின். இதனால் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 94.5 ஓவர்களில் 260 ரன்கள்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 12 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடத் தொடங்கினார்கள் முரளி விஜய்யும் ராகுலும். ஆனால் விஜய், ஹேஸில்வுட்டின் பந்துவீச்சில் 10 ரன்களில் வீழ்ந்தார். இதன்பிறகு 15-வது ஓவரில் இந்திய அணிக்குப் பேரிடியை அளித்தார் ஸ்டார்க். அந்த ஓவரில் புஜாராவை 6 ரன்களிலும் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமலும் வீழ்த்தினார். இரு பந்துகளில் டக் அவுட் ஆகி கோலி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. ராகுல் 47, ரஹானே 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

84 பந்துகளில் அரை சதம் எடுத்தார் ராகுல். இதன்பிறகு 33 ஓவரை ஸ்டீவ் ஓ கீஃப் வீசியபோது பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஓவரில் ராகுல் (64), ரஹானே (13), சாஹா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்திய ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.

அதற்கடுத்த ஓவரில் அஸ்வின் 1 ரன்னில் லயனிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பிறகு ஜெயந்த் யாதவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஓ கீஃப். 

ஜடேஜா அதிரடியாக விளையாடி கொஞ்சம் ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் 2 ரன்களீல் ஓ'கீஃப்பிடம் வீழ்ந்தார். இது ஓ'கீஃப்-பின் 5-வது விக்கெட்டாகும். பிறகு உமேஷ் யாதவின் விக்கெட்டையும் ஓ'கீஃப் வீழ்த்தி 6 விக்கெட்டுகளுடன் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். உண்மையில் அவருடைய பந்துவீச்சு இந்திய அணியை நிலைகுலையச் செய்துவிட்டது. 94/3 என்கிற நல்ல நிலைமையில் இருந்து வீழ்ந்ததற்கு அவர்தான் முக்கியக் காரணம். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸி. அணி இதுபோன்ற சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் 155 ரன்கள் முன்னிலை பெற்றது. 

பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 23 ரன்களுக்குள் தொடக்க வீரர்களை இழந்தது. அஸ்வின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு 19 ரன்களில் அஸ்வினிடம் வீழ்ந்தார் ஹேண்ட்கோம்ப். இந்திய அணியின் கேட்சிங் இன்று மோசமாக இருந்தது. முகுந்த், விஜய் ஆகியோர் கேட்ச்களைத் தவறவிட்டதால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தரமுடியாமல் போனது. நீண்ட முயற்சிக்குப் பிறகு ரென்ஷாவை 31 ரன்களில் வீழ்த்தினார் ஜெயந்த் யாதவ்.

2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்னமும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 298 ரன்கள் முன்னிலையுடன் இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com