

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, சக நாட்டவரான அஸ்வினை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல், இந்திய வீரர் புஜாரா, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் இருவரும் தரவரிசையில் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளனர்.
அந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, முதல் இன்னிங்ஸில் 124 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், 2-ஆவது இன்னிங்ஸில் 52 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதன்மூலம், 7 புள்ளிகளைப் பெற்ற அவர், மொத்தம் 899 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வந்துள்ளார். அஸ்வின், 862 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.
இதன்மூலம், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பிஷன் சிங் பேடி, அஸ்வின் ஆகியோரை அடுத்து முதலிடம் பிடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அதேபோல், 900 அல்லது அதனை நெருங்கிய புள்ளிகள் பெற்ற 2-ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெயரையும் ஜடேஜா பெற்றுள்ளார். முன்னதாக, அஸ்வின் 904 புள்ளிகள் வரையில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன் தரவரிசை: இந்நிலையில், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் விளாசியதன் பலனாக, வலதுகை பேட்ஸ்மேனான புஜாரா தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மொத்தம் 4 இடங்கள் முன்னேறியுள்ள அவர், 861 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து, பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-ஆவது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்மித் தனது தரவரிசை வரலாற்றில், 941 புள்ளிகளைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள், 2-ஆவது இன்னிங்ஸில் 21 ரன்கள் எடுத்ததை அடுத்து அவரது புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
அணிகள் தரவரிசை: இதனிடையே, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இரண்டாவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 2-ஆவது இடம் பிடிக்கும்.
மாறாக, ஆஸ்திரேலியா அதில் தோற்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம்டிரா ஆனாலோ, தென் ஆப்பிரிக்க அணி 2-ஆவது இடத்தைப் பிடிக்கும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, ரூ.6.52 கோடி ரொக்கப் பரிசை தட்டிச் செல்கிறது. 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3.26 கோடியும், 3-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.30 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 4-ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு ரூ.65.26 லட்சம் பரிசுத் தொகை
வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.