காமன்வெல்த் கேம்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் குருராஜா!
இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 56 கிலோவுக்கான பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் பெற்றார்...


ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் 23 விளையாட்டுப் பிரிவுகளில் 275 தங்கப் பதக்கங்களை கைப்பற்ற போட்டியிடுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் உள்பட மொத்தம் 64 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள முதல் பதக்கம் இது. மொத்தமாக 261 கிலோ (ஸ்னாட்ச்+கிளின் அன்ட் ஜெர்க்) எடையைத் தூக்கிய மலேசியாவின் முகமது இஷார் தங்கப் பதக்கம் பெற்றார். கர்நாடகத்தைச் சேர்ந்த குருராஜா மொத்தமாக 249 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. 53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...