பிசிசிஐ சார்பில் இந்தியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.
2018-2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டித் தொடர்கள், சர்வதேச போட்டிகளை ஒளிபரப்புவதற்கான மின்னணு ஏலம் நடைபெற்றது. ஒளிபரப்பு உரிமைகளை பெறுவதற்காக ஸ்டார், சோனி, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் குதித்தன. கடந்த 2012-ல் ஸ்டார் நிறுவனம் கோரிய ரூ. 3,851 கோடியை காட்டிலும் தற்போது அதிகமான தொகை பிசிசிஐக்குக் கிடைத்துள்ளது.
டி-20, 50 ஓவர் , டெஸ்ட் என மூன்று வகைகளில் மொத்தம் 102 போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிஜிட்டல் உரிமை ஏலம் விடப்பட்டது. ஸ்டார், சோனி, ஜியோ உள்ளிட்ட 3 பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. சர்வதேச டிவி உரிமைகள், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, இந்திய துணை கண்ட ஒளிபரப்பு உரிமை, சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த ஒளிபரப்பு உரிமை என 3 வகைகளில் பிசிசிஐ ஏலம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பிசிசிஐ சார்பில் இந்தியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ளது. ஏலத்தில் ரூ. 6138.10 கோடிக்கு உரிமத்தை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2023 வரை இந்திய அணி விளையாடும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் பிசிசிஐக்கு ரூ. 60.10 கோடி வருவாயாக கிடைக்கும். கடந்தமுறை கிடைத்ததை விடவும் 59% அதிகமான தொகை இது.
கடந்த செப்டம்பர் மாதம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2018-2022) ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியது. முன்னதாக, ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சிகளில் மட்டும் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை கடந்த 2008-ம் ஆண்டு சோனி தொலைக்காட்சி நிறுவனம் ரூ.8,200 கோடி கொடுத்து வாங்கியது. தற்போது ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் பிசிசிஐக்கு சராசரியாக ஆண்டுதோறும் ரூ. 3,270 கோடி வருவாயாகக் கிடைக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









