ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் நிற வேற்றுமை நிலவுகிறதா என்ற கேள்விகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வெற்றிப் புகைப்படம் ஒன்று எழுப்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியானது ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற போதும், டெஸ்ட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றிற்குப் பின்னர் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வீரராகள் 'போஸ்' கொடுக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுதான், தற்பொழுது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் நிற வேற்றுமை நிலவுகிறதா என்ற கேள்விகளையம் சர்ச்சைகளையும் உண்டாக்கி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் ஹசிம் ஆம்லா, ஆண்டி பெல்குவாயோ, லுங்கி என்ஜிடி, காகிஸோ ரபாடா, வெர்னான் பிலாந்தர் மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகியோரர் இடது புறமும், அணித்தலைவர் பேப் டு ப்ளூஸிஸ், டீன் எல்கர், டி வில்லியர்ஸ், மோர்னே மோர்கெல், டுவன்னே ஒலிவியர், கிறிஸ் மாரிஸ், டேல் ஸ்டெயின், குவிண்டன் டி காக் மற்று ம்எய்டன் மர்க்ரம் ஆகியோர் வலது பக்கமாக நின்று கொண்டிருந்தனர்.
இதனைக் கவனித்தால் நிறத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய இனத்தவர்கள் இடது புறமும், வெள்ளை வீரர்கள் மறுபுறமும் இருப்பது புலப்படும். இதனைத் தவிர்த்து வயது, அனுபவம், மூப்பு அல்லது சாதனை பட்டியல் என எதுவுமே இப்படி பிரிந்து இருப்பதற்கு அவர்களுக்கு இடையேயான பொதுவான காரணிகளாக இல்லை.
அதேசமயம் களத்தில் எந்த விதமான நிற வேற்றுமைகளும் காணப்படவில்லை. என்பதனையும் குறிப்பிட வேண்டும் முக்கியமாக அணித்தலைவரான பேப் டு ப்ளூஸிஸ். அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடா ஒவ்வோர் முறை புதிய விக்கெட் வீழ்த்தும் பொழுது, அவருக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து வாழ்த்தி வந்ததை மைதானத்தில் அனைவரும் பார்த்திருப்பார்கள்.
தென் ஆப்பிரிக்காவினைப் பொறுத்த வரை பொது மக்களிடையே ஆங்கிலேயே காலனி ஆதிக்கத்திலிருந்த காலம் தொட்டு உருவான நிற வேற்றுமைக் கொடுமை பின்பற்றப்பட்டு வந்ததால், 1948-ஆம் ஆண்டில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை அந்நாடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1992-ஆம் ஆண்டில்தான் அந்த தடை விளக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் தென் ஆப்பிரிக்க பங்கேற்கத் தொடங்கியது.
எனவே அக்குறைனை நீக்கும் வகையில் அந்நாட்டுகிரிக்கெட் வாரியம் நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அங்கு எந்த மைதானத்தில் என்ன கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும், 'கிரிக்கெட்டில் நிற வேற்றுமைக்கு இடமில்லை' என்னும் செய்தியானது மைதானத்தின் பெரும்பாலான திரைகள் வழியாக ஒளிபரப்பப்படும்.
அத்துடன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உருவாக்கியுள்ள மாற்றத்துக்கான' புதிய கொள்கை திட்டத்தின் படி அந்நாட்டு தேசிய அணியில் ஆறு பிற இனத்தவர்கள் (நிறத்தின் அடிப்படையில்) இடம் பெற வேண்டும். அவர்களில் குறைந்த பட்சம் இருவர் ஆப்பிரிக்க கருப்பு இனத்தவராக இருக்க வேண்டும் என்பது விதியாகும். இது அப்படியே எல்லா போட்டிகளிலும் பின்பற்றப்படா விட்டாலும்,ஒரு குறிப்பிட்ட சீசனில் சராசரியாக பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிடப்படுகிறது.
இப்படி இத்தனை முயற்சிகள் எடுத்து வந்தாலும் இந்தக் குறிப்பிட்ட புகைப்படமானது, ஒரு தவறான அபிப்ராயத்தினை உருவாக்கி இருக்கிறது என்றும கூறலாம்.