இந்திய ஏ அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் - செப்டம்பரில் தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு மட்டும் ரமேஷ் பவார், பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ரமேஷ் பவார், இந்திய அணிக்காக இரு டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஜூலை 2018-ல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
மகளிர் உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படாத நிலையில் அவருக்கும், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் பவாரின் பதவிக் காலம் முடிந்ததால், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தமிழக வீரர் டபிள்யு வி.ராமன் நியமிக்கப்பட்டார்.