காயத்திலிருந்து முழுவதுமாக மீண்ட பிருத்வி ஷா: மும்பை அணியில் இடம்பெற்றார்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பு, ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிருத்வி ஷாவைத் தூக்கிக்கொண்டு ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் செய்துபார்த்தபோது தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் முழுக்க பிருத்வி ஷா-வால் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில் பிப்ரவரி 21 முதல் இந்தூரில் தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார் பிருத்வி ஷா. வியாழன் அன்று சிக்கிம் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது ரஹானே தலைமையிலான மும்பை அணி. அந்த அணியில் ஷ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்குர் போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.