ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது செளராஷ்டிர அணி.
பெங்களூரில் செளராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய கர்நாடக அணி, 100.3 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய செளராஷ்டிரா அணி 71 ஓவர்களில் 236 ரன்களே எடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடக அணி, 2-வது இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்தது. இதனால் அரையிறுதியில் வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-ம் நாள் முடிவில் செளராஷ்டிர அணி, 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 108, ஜாக்சன் 90 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த செளராஷ்டிர அணி, 91.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஜாரா 131 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.
ரஞ்சி கோப்பையின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேரள அணியை இரண்டாவது நாளிலேயே ஒரு இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது நடப்பு சாம்பியன் விதர்பா.
இதையடுத்து விதர்பா - செளராஷ்டிரா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி இறுதி ஆட்டம், பிப்ரவரி 3 அன்று தொடங்கவுள்ளது.