இந்தியாவுக்கு எதிரான 2 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து ஹைதராபாத்தில் ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது:
உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வில் ஐபிஎல் பங்களிப்பு எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. ஒரு நல்ல அணிதான் நமக்கு வேண்டும். ஐபிஎல்-லுக்கு முன்பு, உலகக் கோப்பைப் போட்டிக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். வீரர்களுக்கு ஐபிஎல் எப்படி அமைந்தது என்பதை வைத்து எந்த மாற்றமும் இருக்காது.
ஒன்றிரண்டு வீரர்களுக்கு ஐபிஎல் சரியாக அமையவில்லையென்றால், அதனால் அவர்கள் உலகக் கோப்பைத் திட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். இதெல்லாம் பெரிய விஷயமில்லை.
இந்த ஒருநாள் தொடரில், வீரர்கள் சிலர், குறிப்பிட்ட சூழலில் எப்படி விளையாடுகிறார்கள் எனப் பார்க்க விரும்பினால், அந்தச் சூழலில் அவர்கள் விளையாட வாய்ப்பளிப்போம். அதேசமயம் குறிப்பிட்ட சூழலில் அந்த வீரரால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனால் அவருக்குத் திறமையில்லை என்று அர்த்தமில்லை என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடக்கிறது. இதில் மொத்தம் 10 அணிகள் குரூப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறை ஆட்டங்களில் பங்கேற்கும். முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 14-இல் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.