இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஹனுமா விஹாரி (25) உருவெடுத்துள்ளார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முறையே, 93, 111 மற்றும் 53* என மொத்தம் 289 ரன்கள் குவித்தார். முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
ஆட்டத்திறன், தலைமுடி உதிர்வு, பயிற்சியாளரின் வழிகாட்டுதல் என பல சுவாரஸ்ய சம்பவங்களை ஹனுமா விஹாரி பகிர்ந்துகொண்டுள்ளார். பிசிசிஐ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் விஹாரி பேசியதாவது:
கடந்த 2 மாதங்களாக நான் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவது நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது. எனது ஆட்டத்திறன் முழுமையாக இருப்பதாக உணர்கிறேன். அந்த நேரத்தில் களத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப எனது ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
நான் பேட்டிங் செய்யும்போது என கால் முட்டியை சிறிது வளைத்து நிற்குமாறு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கினார். இந்த முக்கிய அறிவுரை தான் என ஆட்டத்திறனை மேம்படுத்தியது. சவால் நிறைந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவேன். அதுதான் நான் சிறப்பாக செயல்பட வழிவகுத்தது.
களத்தில் விராட் கோலி மற்றும் அஜிங்க்ய ரஹானே ஆகியோருடன் இணைந்து பேட் செய்தது பல அனுபவங்களை பெற்றுத்தந்தது. இந்த தொடர் நல்ல முறையில் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
மிகவும் இளவயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அதனால் தான் என்னால் 6 ஆயிரம் ரன்களைக் குவிக்க முடிந்தது. எனது தலைமுடி எவ்வாறு உதிர்ந்தது என எனக்கு சத்தியமாக தெரியாது. ஒருவேளை சிறு வயது முதல் நிறைய பேட்டிங் செய்ததால் இருக்கலாம் என நகைச்சுவையுடன் பேட்டியை முடித்தார்.