ராகுல், பாண்டியாவுக்கு தண்டனை வழங்குவதை முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராகுல், பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமானது. இதையடுத்து, இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, பிசிசிஐ நிர்வாகக் குழு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரக் ட்ரிபாதி, "ராகுல் மற்றும் பாண்டியா இருவருமே இளம் வீரர்கள். அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் பொறுப்பற்ற முறையில் கருத்தை தெரிவித்துள்ளனர். நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள இரண்டு பேரும், அவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனை விவரத்தை விசாரணை அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும் என்று நம்புகின்றனர்" என்றார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பாண்டியா மற்றும் ராகுலுக்கு 2 போட்டிகளுக்கு தடை விதிப்பதற்கு வினோத் ராய் பரிந்துரை செய்தார். ஆனால், நிர்வாகக் குழுவின் மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி, இந்த விவகாரத்தை பிசிசிஐ-யின் சட்ட வல்லுநர்களிடம் கொண்டு சென்றார். அவர்கள், விதிமுறை மீறல் என்று கருத மறுப்பு தெரிவித்து, விசாரணை அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்தனர்.
இதனிடையே பிசிசிஐ தொடர்பான வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் பரிந்துரையின் பேரில் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா கோபால் சுப்ரமணியனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
இதை கருத்தில் கொண்டு, நீதிபதிகள் எஸ் ஏ போப்டே மற்றும் ஏ எம் சாப்ரே அடங்கிய அமர்வு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விளக்கமாக தெரியவில்லை. அதனால் நரசிம்மா பொறுப்பேற்ற பிறகு, பிசிசிஐ தொடர்பான வழக்கு குறித்து அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இதன்மூலம் ராகுல், பாண்டியா குறித்தான தண்டனை விவரம் முடிவுக்கு வராமல் மேலும் நீடிக்கிறது.